புன்செய் புளியம்பட்டி
பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(50). கூலித்தொழிலாளியான இவர் 5 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று சுப்பிரமணி வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு மாலையில் கிராமத்தின் நடுவே தனது வீட்டின் அருகே உள்ள ஆட்டுப்பட்டியில் அடைத்தார். இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் எழுந்து பார்த்தபோது சிறுத்தை ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடித்துகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கிராம மக்கள் சத்தம்போட்டதால் சிறுத்தை ஒரு ஆட்டை தூக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
ஆட்டுப்பட்டிக்குள் 2 ஆடுகள் இறந்து கிடந்தன. இந்நிலையில் கிராமத்திற்குள் சிறுத்தை நடமாடிய தகவலறிந்த பசுவபாளையம் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வனத்துறை உயரதிகாரிகள் வரவேண்டும். இல்லையெனில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் கூறினர்.